வேட்டிக்குத் தடை.. அரசு நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்: ஸ்டாலின்
சென்னை: வேட்டி அணிந்து வந்தோரைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய சென்னை கிரிக்கெட் கிளப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுகுறித்து பொறுத்திருந்து பார்ப்போம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு வெளியே இன்று செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
கேள்வி: தனியார் கிளப்பில் நீதிபதி ஒருவர் அனுமதிக்கப்படாதது குறித்து நீங்கள் சட்டசபையில் என்ன கூறினீர்கள்?
ஸ்டாலின்: நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகின்றன நம் பண்பாட்டிற்குரிய உடையை அணிந்துவரக்கூடாது எனத் தடுத்திருப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்களுக்கும் ஆனால் அப்போது நீதியரசர், தன்னை அனுமதிக்காத கிளப்பினுடைய, (மினிட் )ஆலோசனைப் புத்தகத்தில், "நான் வேட்டி கட்டுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். உங்கள் விதிகளுக்காக எனது பாரம்பரிய உடையை விட்டுக்கொடுக்க முடியாது" என்று பதிவு செய்துவிட்டு வந்தார்.
ஆகவே இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் எந்த அமைப்பிலும் நடைபெறாதவாறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி இருக்கிறோம்.
கேள்வி: தனியார் கிளப் விதிகளில் எப்படி அரசு தலையிட முடியும் ?
ஸ்டாலின்: அது தனியார் கிளப்பாக இருந்தாலும் நடைபெற்ற நிகழ்ச்சி ஒரு பொது நிகழ்ச்சி. உயர்நீதிமன்ற நீதிபதி புத்தக வெளியீடு விழா அது. அந்த நிகழ்ச்சியில் இப்படி நிகழ்ந்திருப்பது வேதனைக்குரியது.
கேள்வி: அரசின் பதில் திருப்தி அளித்ததா?
ஸ்டாலின்: அந்த துறை சார்ந்த கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் ஸ்டாலின்.