தொடரும் "ரெட்"... கூட்டணிக்குள் திருமா. வருவதை தடுக்க மீண்டும் செக் வைத்த ஸ்டாலின்!
சென்னை: திமுக கூட்டணிக்குள் எப்படியும் நுழைந்துவிட வேண்டும் என்ற விடுதலைச் சிறுத்தைகளின் ஒவ்வொரு நகர்வுக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலின் தரப்பு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. சென்னையில் இன்று திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நாங்களும் பங்கேற்போம் என திருமாவளவன் அறிவித்திருந்தாலும் அந்த ஆர்ப்பாட்டத்தை ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் 'ஹைஜாக்' செய்துவிட்டதால் சிறுத்தைகள் தரப்பு ஏமாற்றமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றால் 'வன்னியர்' வாக்குகள் கிடைக்காது என்பது முக ஸ்டாலின் மற்றும் ஆதரவாளர்களின் உறுதியான நம்பிக்கை. இதனால் திமுக கூட்டணியின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் அவமதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அவர்களாகவே வெளியேறும் சூழல் நிலை உருவானது.
திமுக அணியில் இருந்து வெளியேறி மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றது விடுதலை சிறுத்தைகள். ஆனாலும் திமுக மீது ஒரு மென்மையாக அணுகுமுறையைத்தான் விடுதலை சிறுத்தைகள் கடைபிடித்தது. இது மக்கள் நலக் கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுக அணிக்கே...
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதனால் மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக் குறியானது. அப்போதே மீண்டும் திமுக கூட்டணிக்கு எப்படியாவது திரும்புவது என விடுதலைச் சிறுத்தைகள் தீர்மானித்திருந்தது. இதற்கான பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
திகவுக்கு திடீர் ஆதரவு
இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திராவிடர் கழகம் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திமுகவை ஆதரிக்கும் திகவின் போராட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது ஆச்சரியமல்ல.. திடீரென திராவிடர் கழகம் நடத்தும் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தரும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என்றும் திருமாவளவன் அறிவித்தார்.
முன்னோட்டமோ?
தி.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலையில் திமுகவின் கூட்டணித் தலைவர்களைப் போல காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, திருமா படங்கள் ஒன்றாக இணைத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பெருமளவு பங்கேற்க கருணாநிதியும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் திமுகவில் யார் கலந்து கொள்வார்கள் என கருணாநிதி அறிவிக்கவில்லை. ஆகையால் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை சேர்ப்பதற்காக முன்னோட்டமாக இது இருக்கலாம் என கருதப்பட்டது.
ஸ்டாலின் உஷார்
இதனிடையே திடீரென நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் திகவின் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்; ஆகையால் பெருந்திரளாக திமுகவினர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதை பலரும் ஷேர் செய்து வந்தனர். இதனால் விடுதலைச் சிறுத்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்டாலின் தரப்பு நம்மை வேண்டாம் என்கிற போது அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் வலிய கலந்து கொண்டால் சரியாக வருமா? என சிறுத்தைகள் தரப்பு தீவிர ஆலோசனை நடத்தியது.
ஹைஜாக் செய்த ஸ்டாலின்
இன்று காலை தி.க. தலைவர் வீரமணி தலைமையில்தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் ஸ்டாலின் கலந்து கொள்ள, ஸ்டாலின் ஆதரவாளர்களே ஆர்ப்பாட்ட மேடையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள அது திமுக மேடையாகிப் போனது... இதனால் திருமாவளவன் கலந்து கொள்ளாமல் பெயருக்கு விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் சிலர் தலையை காட்டிவிட்டு திரும்பினர்.
நிச்சயம் 'செக்'
திக தலைவர் வீரமணியின் மூலமாக எப்படியாவது விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணிக்குள் வந்துவிடும் என கருதியே ஸ்டாலின் தரப்பு தம்முடைய ஆதரவாளர்களை பெருந்திரளாக பங்கேற்கச் செய்து திருமாவளவனுக்கு செக் வைத்துவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.