பஸ் கட்டண உயர்வு: நாளைக்குள் திரும்ப பெறாவிட்டால்.. மா.செக்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
பேருந்து கட்டணத்தை நாளைக்குள் திரும்ப பெறாவிட்டால் நாளை மறுநாள் முதல் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேருந்து கட்டணத்தை நாளைக்குள் திரும்ப பெறாவிட்டால் நாளை மறுநாள் முதல் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அண்மையில் பேருந்து கட்டணத்தை பாதிக்கும் மேலாக உயர்த்தியது. இதனால் தமிழக மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பேருந்து கட்டணத்தை நாளைக்குள் திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திமுகவை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தனித்தனியாக போனில் தொடர்பு கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நாளைக்குள் பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பபெறாவிட்டால் நாளை மறுநாள் காலை ஆங்காங்கே சாலைமறியல் போராட்டம் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.