பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி மறியல்... கைது செய்யப்பட்ட ஸ்டாலின் விடுதலை!
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை கொளத்தூரில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பேரணியாக செல்கின்றனர்.
சென்னை : பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை கொளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காலையில் கைது செய்யப்பட்ட நிலையில் மாலையில் விடுவிக்கப்பட்டார்.
பேருந்து கட்டணத்தை முழுமையாக குறைக்க வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து நேற்று அரசு சொற்ப அளவில் பேருந்து கட்டணத்தை குறைத்தது.
எனினும் இந்த கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு என்று கூறியுள்ள திமுக இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சியினரின் பங்களிப்புடன் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
கொளத்தூரில் திமுக பேரணி
திமுக செயல்தலைவரும் எதர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து கையில் கொடியேந்தி பேரணியாக வந்தார். அவருடன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர்.
கொளத்தூரில் ஸ்டாலின் மறியல்
பேரணி முடிவில் கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் அரசுப் பேருந்தை மறித்து ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்டாலின் கைது
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொளத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து மாலையில் ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் விடுவித்தனர்.
சைதாப்பேட்டையில் வைகோ மறியல்
இதே போன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற மறியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். சாலையின் இரு மருங்கிலும் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கே.என். நேரு மறியல்
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மறியல் போராட்டத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதகிளில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விடுதலையால் மகிழ்ச்சி இல்லை
விடுதலைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மக்கள் பிரச்னைக்காக சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்தோம். ஆனால் சிறையில் இடம் இல்லை என்று நம்மை திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். விடுதலை என்றால் மகிழ்ச்சி தான் வரும், ஆனால் காவல்துறையினர் தற்போது நம்மை விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கவில்லை. பேருந்து கட்டணம் குறைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.