ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் தான் வெற்றி பெறச் செய்தார்கள்... நினைவூட்டிய ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றி பெற செய்தது மாணவர்கள் என்பதை மறந்துவிட முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் தான் வெற்றி பெறச் செய்தார்கள் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவையொட்டி மாநில அளவில் மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான இறுதிப்போட்டிகள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள ஆர்.பி.கே. திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு மத்தியில் பேசிய அவர் : மாணவர்கள் நினைத்தால் அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் சரி செய்ய முடியும். நம் மொழி மற்றும் இனத்தை காக்க மாணவர்கள் முன் வர வேண்டும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு மாணவர்கள் தான் முக்கியக் காரணம். நீட் தேர்வை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்திருந்தால், மாநில அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மாணவர்களுக்காக போராடி இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் பேசினார்.