தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது : ஸ்டாலின் எச்சரிக்கை
தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது : ஸ்டாலின் எச்சரிக்கை
Recommended Video
சென்னை : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்றது போல துன்பியல் சம்பவம் சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சேலத்தில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக இந்த சாலை சென்னை வந்தடையும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணிகளுக்காக 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், விவசாய நிலங்கள், வனப்பகுதி, ஆறுகள் பாதிக்கப்படும் என்றும், 150 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இந்த திட்டத்திற்கு சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வந்த சிலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனால், போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்கிற கோஷத்தை முன் வைத்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி போராட்டத்தில் நடைபெற்றது போல சேலம் மக்கள் போராட்டத்தில் எந்த வித தவறும் நடந்துவிடக்கூடாது. எனவே, இதுகுறித்து தமிழக அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.