2016ல் திமுக ஆட்சி… 6வது முறையாக கருணாநிதி முதல்வர்...: நமக்கு நாமே பயணத்தில் அசத்திய ஸ்டாலின்...
கன்னியாகுமரி: அதிமுக ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவி வருகிறது. 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறிய ஸ்டாலின், 6வது முறையாக மீண்டும் கருணாநிதி முதல்வர் ஆவார் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க நமக்கு நாமே பயணத்தை தொடங்கிவிட்டார் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின். நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழியில் ‘நமக்கு நாமே' விடியல் மீட்பு பயண அடையாள சின்னத்தை ‘ரிமோட்' மூலம் திறந்து வைத்து, பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பேசிய ஸ்டாலின், இந்த அரசு உங்களுடைய பிரச்சினைகளை, மக்களின் தேவைகளை உணர்ந்து தமது கடமையை ஆற்றிட வேண்டும். மதநல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது என்றார்.
தொழில்வளர்ச்சியை பெருக்குவது, உள்கட்டமைப்புகளை உருவாக்குவது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை நடத்துவதும் அரசின் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது. இவைகளை எல்லாம் ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்கிறதா? என்றால் இல்லை என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது என்றார்.
கன்னியாகுமரியில் ஸ்டாலின்
கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தி விட்டு, அங்குள்ள கடைகாரர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் கலந்துரையாடினார். பிறகு காமராஜர் மணி மண்டபம் மற்றும் காந்தி மணிமண்டபம் சென்று மரியாதை செலுத்தி விட்டு, பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
மகளிர் சுய உதவி குழுவினருடன்
1000த்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், அதிமுக ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவிவருகிறது. மின்சார கொள்முதல், கிரானைட், தாதுமணல், அரசு ஊழியர்கள் நியமன முறைகேடு என அனைத்திலும் ஊழல் நிலவிவருகிறது. இந்த ஊழல் ஆட்சியை, அகற்ற சரியான நேரம் வந்து விட்டது என்றார்.
பூரண கும்ப மரியாதை
கன்னியாகுமரியில் உள்ள இந்து மத அர்ச்சகர்கள் ஸ்டாலினுக்கு பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுத்தனர். மேலும், சி.எஸ்.ஐ பிஷப்புகள், ரோமன் கத்தோலிக், பெந்தகொஸ்தே சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் மற்றும் இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்களையும் ஸ்டாலின் சந்தித்து உரையாடினார்.
உற்சாக வரவேற்பு
வழக்கமாக வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் பயணம் கிளம்பும் ஸ்டாலின் இம்முறை பேண்ட் சட்டையில் இளமையாக, உற்சாகமாக கிளம்பியதோடு பல இடங்களுக்கு நடந்தே சென்று மக்களிடம் உரையாடினார். அனைவரிடமும் கை குலுக்கியதோடு உற்சாகத்தோடு பேசினார்.
விடியல் பயணம்
இந்த அரசை நம்பி எந்த பலனும் இல்லை. அதனால் இனி நமக்கு நாம் தான். எனவே தான் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான பணியிலே நமக்கு நாமே என்ற இந்த பயணத்தை நான் தொடங்கி இருக்கிறேன். இன்னும் எத்தனை நாளாக விடியல் காணாமல் இருக்கப்போகிறோம். இனியும் நாம் தாமதிக்கக் கூடாது.
தேர்தல் களம்
இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட இன்னும் 8 மாதங்கள் தான் இருக்கிறது. இந்த நமக்கு நாமே பயணம் மக்கள் இயக்கமாக மாறி இருப்பதை நாம் காண முடிகிறது. எத்தனையோ தேர்தல் களத்தை தி.மு.க. சந்தித்துள்ளது. எத்தனையோ அரசியல் கட்சிகளை எதிர்த்து தி.மு.க. வெற்றிகளை கண்டுள்ளது. எதிரிகளை களத்திலே கம்பீரமாக சந்திக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் உண்டு.
அதிமுக ஆட்சியில்
5 ஆண்டு காலம் மக்கள் பணியை அ.தி.மு.க. செய்யவில்லை. பணத்தால் இன்னொரு முறை வாக்காளர்களை ஏமாற்றிவிடலாம் என்று அ.தி.மு.க. நினைக்க முடியாத அளவிற்கு உங்களது பணியை செய்திட வேண்டும்.
மீண்டும் தி.மு.க. ஆட்சி
மிகவிரைவில் 2016-ல் மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நிலையில் மக்கள் தயாராக இருக்கிறார்கள். உற்சாகம், உழைப்பு ஆகிய இரண்டையும் இரண்டு கண்களாக பாவித்து உடனே புறப்பட வேண்டும். இந்த துருப்பிடித்த ஆட்சிக்கு முடிவு கட்ட ‘முடியட்டும் அ.தி.மு.க. அராஜக ஆட்சி, விடியட்டும் கழகத்தின் நல்லாட்சி'. குமரி மாவட்டத்தில் தொடங்கும் இந்த பயணத்தை 3 கட்டமாக தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கிறேன் என்று போகுமிடமெங்கும் உற்சாகமாக பேசி வருகிறார் ஸ்டாலின்.