திருவாரூரில் காவிரி உரிமை மீட்பு பயணம்... முத்தரசனை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டி ஓட்டிய ஸ்டாலின்
காவிரி மீட்பு பயணத்தின் நான்காம் நாளான இன்று மாட்டு வண்டியில் பயணித்தார் ஸ்டாலின்.
Recommended Video
சென்னை: காவிரி மீட்பு பயணத்தின் நான்காம் நாளான இன்று திருவாரூரில் தொடங்கினார். கருணாநிதியின் தாயாரும் தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். மாட்டு வண்டியில் பயணித்து தொண்டர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7ஆம்தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். ஞாயிறன்று தஞ்சை தெற்கு மாவட்டத்தில் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது.
மூன்றாவது நாளான திங்கட்கிழமை தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அன்னப்பன்பேட்டையில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயண கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் ஸ்டாலின்
4வது நாளான இன்று திருவாரூரில் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்கினார். தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து திருவாரூர் நகர வீதிகளில் நடந்து சென்றார்.
மாட்டு வண்டியில் பயணம்
முதலில் நடந்து சென்ற ஸ்டாலின் மாட்டு வண்டி ஓட்டிச்சென்றார். திருவாரூர் மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, துர்காலயா தெரு வழியாக சென்று காட்டூர், பவித்ரமாணிக்கம், திருக்கண்ணமங்கை, குழிக்கரை, தேவர்கண்டநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
செல்ஃபி வித் ஸ்டாலின் உதயநிதி
ஸ்டாலின் பயணிக்கும் இடங்களில் மக்கள் மத்தியில் ஆங்காங்கே பேசுகிறார். அவருடன் உதயநிதியும் பயணம் செய்கிறார். மாணவர்கள், இளம் பெண்கள் உற்சாகத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். காவிரி உரிமை மீட்பு பயணத்தினால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மூலமாக, உணர்ச்சி வாயிலாக நாம் எதிர்பார்த்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும் என்று ஸ்டாலின் கூறினார்.
நாடகம் நடத்துகிறார்கள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென இறுதியான, உறுதியான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், ஸ்கீம் என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஸ்கீம் என்றால் என்ன என்று அகராதியை எடுத்துப் பார்த்தாலே தெரியும். எனவே அதை அவர்கள் புரிந்து கொண்டு இருந்தாலும் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
போராட்ட களம்
தூங்குபவர்களை எளிதில் எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவது போல நாடகம் நடத்தி கொண்டிருப்பவர்களை எழுப்ப முடியாது. காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை தொடர்ந்து இழைத்து வருகின்றன. அதிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்கு பல போராட்ட களங்களை வகுத்து வருகிறோம்.
துக்க தினம் அனுசரிப்போம்
தமிழ்நாடு ஒரு துக்க நாள் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது நாம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும், அனைவரும் கருப்பு சட்டை, கருப்பு புடவை அணிந்து நம்முடைய உணர்வை வெளிப்படுத்த வேண்டும். அன்று தமிழ்நாடே கருப்பு தினமாக காட்சியளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
திருத்துறைப்பூண்டி
பின்னர் அம்மையப்பன் கிராமத்தில் விவசாயிகள், மாணவர்களை சந்தித்து அவர் பேசுகிறார். இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கமலாபுரத்தில் பயணத்தை தொடங்கி கூத்தாநல்லூர், மன்னார்குடி, கோட்டூர் வழியாக திருத்துறைப்பூண்டியில் பயணத்தை நிறைவு செய்கிறார்.
கும்பகோணத்தில் 2வது குழு
காவிரி உரிமை மீட்பு 2வது குழுவினர் அரியலூரில் இருந்து தொடங்கினர். இன்று காலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருவையாறில் மீட்பு பயணத்தை தொடங்கு கின்றனர். தொடர்ந்து கண்டியூர், மாத்தூர், அய்யம்பேட்டைக்கு செல்கின்றனர். மாலையில் பாபநாசம், தாராசுரம், வழியாக சென்று கும்பகோணத்தில் இன்றைய பயணத்தை நிறைவு செய்கின்றனர்.