பரிகாரம் செய்யவே ஸ்டாலின் குளங்களை தூர் வாருகிறார்... போட்டுத் தாக்கும் பொன் ராதாகிருஷ்ணன்!
பரிகாரம் செய்யவே ஸ்டாலின் குளங்களை தூர் வாருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவில்: பரிகாரம் செய்யவே ஸ்டாலின் குளங்களை தூர் வாருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மோடி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறி வட மாநில தலைவர்களை மகிழ்விக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்றும் அவர் சாடினார்.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு அக்கட்சியினர் சாதனை மலர் வெளியிடுவது, ஸ்டிக்கர் வெளியிடுவது என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
அசாமில் மேம்பாலம்
மேலும் அசாம் மாநிலத்தில் நாட்டிலேயே மிக நீளமான 9.3 கிலோ மீட்டர் நீள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளது குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், பிரம்மபுத்திரா நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மூலம் அசாம், அருணாசல பிரதேசங்கள் இடையே போக்குவரத்து மேம்படும் என்றார்.
60 ஆண்டுகளில் செய்யவேண்டிய பணி..
மோடி பதவியேற்கும் போது 4 கோடி வங்கி கணக்குகள் இருந்தன. இப்போது அது 28 கோடி வங்கி கணக்குகளாக உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை மோடி அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
எடப்பாடிக்கு பாராட்டு
தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் வீடுகள் கட்டி கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும்
எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு வந்து 100 நாட்கள் கடந்திருப்பதற்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.
பரிகாரம் செய்யவே தூர்வாருகிறார்
மேலும் மு.க.ஸ்டாலின் பரிகாரம் செய்யவே குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். வருகிற 3ஆம் தேதி கூட்டணி அமைப்பதற்காக தி.மு.க. சார்பில் நடைபெறும் கூட்டத்தில் வட இந்திய தலைவர்கள் பங்கேற்கிறார்கள், அ.தி.மு.க. அணிகளுக்கு இடையே கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பிரதமர் மீது குற்றம்சாட்டி மு.க.ஸ்டாலின் வடமாநில தலைவர்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார் என்றும் அவர் கூறினார்.
தலையிடவேண்டிய அவசியம் இல்லை
பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றுக்கட்சிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிரதமர் மோடி கூறினார். பிரதமரும் ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.