வாட்ஸ் ஆப்பில் போட்டு வறுக்கும் நிலைக்கு ஆளாகி விட்டதே குமாரசாமி தீர்ப்பு... ஸ்டாலின்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கு தவறு என்று பலரும் கூறிவரும் நிலையில்,திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், வாட்ஸ்-அப் முயல் கதை ஒன்றைச் சொல்லி, விமர்சித்துள்ளார்.
கருணாநிதியின் 92வது பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின், இன்றைக்கு நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. கணக்கு நடக்கிறது. கணக்கு என்றால் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு விதமான கணக்காக அதுப் போய் கொண்டிருக்கிறது.
கணக்கு என்பது எல்லோருக்கும் சமம். எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும் கணக்கு சமமாக தான் இருக்கும், இந்த மாநிலத்திற்கு ஒரு கணக்கு, இந்த நபருக்கு ஒரு கணக்கு என கணக்கு வித்தியாசமாக இருக்காது. ஆறையும், நான்கையும் கூட்டினால் பத்து தான். ஒன்றாம் வகுப்பு பிள்ளையை கூப்பிட்டுக் கேட்டால் கூட சொல்லும் சரியாக. ஆனால் சமீபத்தில் தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், ஆறையும், நான்கையும் கூட்டினால் 24 என்று சொன்னால் ஆச்சரியப்படுவோமா, வியப்படுவோமா சிந்தித்துப் பார்க்க வேண்டாம்.
முயலுக்கு மூன்று கால்
இந்த கணக்கு எப்படி இருக்கிறது என்றால், துரைமுருகன் சொன்னாரே இன்று விஞ்ஞான முறையில் வாட்சாப், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றைப் பார்க்கிறோம் எல்லாவற்றையும் இப்போது கைகளிலே பார்க்கிறோம். நான் கூட திருவள்ளூர் மாவட்ட கூட்டத்திலே சுட்டிக் காட்டினேன். வாட்சாப்பிலே ஒரு நகைச்சுவையான கதை, என்ன கதை என்றால் முயல் கதை, ஒரு ஜமீன்தார் திடீரென்று அவருக்கு ஒரு ஆசை வந்திருக்கிறது. தோட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய முயல்களில் ஒரு முயலைப் பிடித்து, அதை அடித்து சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்திருக்கிறது.
உடனே தன்னுடைய வீட்டு சமையல்காரியை கூப்பிட்டு, ஒரு முயலை பிடித்து சமைத்துக் கொடு என்று சொல்கிறார். அந்த சமையல்காரியும் கஷ்டப்பட்டு அடித்து சமைத்து பரிமாறியிருக்கிறாள். அவள் சமைக்கிற போது அதை ருசிப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறாள். உடனே அதனுடைய நான்கு கால்களில் ஒரு காலை எடுத்து அந்த சமையல்காரி சாப்பிட்டுவிட்டாள். மிச்சம் இருப்பது மூன்று கால்கள். அந்த மூன்று காலுடன் சமைத்த கறியை கொண்டு போய் தன்னுடைய ஜமீன்தாருக்கு பரிமாறியிருக்கிறாள்.
பரிமாறுகிற போது அந்த முதலாளிக் கேட்டார். என்னம்மா மூன்று கால் தான் இருக்கிறது மிச்சம் ஒரு கால் எங்கே. உடனே அவள் சொன்னாள் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் என்று. இது என்ன நியாயம் நீ சொல்வது தவறாக இருக்கிறது என்று பக்கத்தில் இருக்ககூடிய பெரியவரிடத்திலே இடத்திலே பஞ்சாயத்துக்கு போயிருக்கிறார்கள். அவர் சொல்லியிருக்கிறார், இல்லை இல்லை முயலுக்கு நான்கு கால்கள் தான் என்று. அதன் பிறகு அந்த சமையல்காரிக்கு திருடி என்ற பட்டத்தையும் கொடுத்து தண்டனையும் கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்த பெண் சும்மா இருக்கவில்லை அந்த ஊரில் இருக்ககூடிய பெரிய நாட்டாமையை சாமி என்று பெயர் அவரைப் பிடித்து பஞ்சாயத்துக்கு போய் இருக்கிறாள். அந்த நாட்டாமை பஞ்சாயத்து பண்ணி விட்டு கடைசியாக முயலுக்கு மூன்று கால் தான் என்று சொல்லிவிட்டார்.
அடுத்த நாள் உண்மை வெளிவருகிறது. அதாவது முயலுக்கு மூன்று கால் இல்லை நான்கு கால் தான் என்று. அதற்கு பிறகு இந்த தீர்ப்பை எப்படி தந்திருக்கிறீர்கள் என்று விளக்கம் கேட்டால் ஒரு கணக்கு வருகிறது. முயலுக்கு முன்னாடி இரண்டு கால் பின்பக்கத்தில் இரண்டு கால் ஆக மூணுகால் தான். இது தான் கணக்கு.
ஆக இந்த கணக்கு தான் நாட்டிலே மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. அரசியலையும் அசிங்கியமாக்கிக் கொண்டிருக்கிறது. நீதியை வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை வந்துள்ளது.