திமுக எம்எல்ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினுக்கு பெரும்பான்மை கிடைக்காது-ஜெயக்குமார்
சட்டசபை தேர்தல் வருவதை திமுக எம்எல்ஏக்களே விரும்பவில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையோடுதான் இருக்கிறது என்று கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்எல்ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அவருக்கே பெரும்பான்மை கிடைக்காது என்று கிண்டலடித்தார்.
சென்னை பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இலங்கை வசம் இருந்த சுமார் 42 படகுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என்றார்
இலங்கையில் இருந்து 8 படகுகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 131 படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருவதாக கூறினார்.
எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை
எடப்பாடி அரசு பெரும்பான்மை பலத்துடனே இருக்கிறது என குறிப்பிட்டார். டிடிவி தினகரனுக்கு அவரது எம்எல்ஏக்களே ஆதரவாக இல்லை என்று கூறினார்.
ஸ்டாலினுக்கு ஆதரவில்லை
திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு ஆதரவு இல்லை. அவர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அவரே ஜெயிக்க மாட்டார். ஏனெனில் சட்டசபை தேர்தல் வருவதை திமுக எம்எல்ஏக்களே விரும்பவில்லை. பல எம்எல்ஏக்கள் புதிதாக வெற்றி பெற்றவர்கள்.
தினகரன் மீது வழக்கு
வழக்கு பதிவு செய்யப்படாமல் இருக்க தினகரன் ஒன்றும் காந்தி கிடையாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் வழக்கு தொடரப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
ஸ்டாலின் திரும்பி பார்ப்பாரா?
ஸ்டாலின் முதலில் தனது முதுகில் உள்ள அழுக்கை திரும்பி பார்க்க வேண்டும். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலில் அடிக்கல் நாட்டியவர் எம்ஜிஆர்தான். அவரது பெயரை நீக்கியவர் கருணாநிதி. இன்றைக்கு சிவாஜி சிலையில் கருணாநிதியின் பெயரை நீக்கி விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்றும் கூறியுள்ளார் ஜெயக்குமார்.