கொளத்தூரில் ஸ்டாலின் கொண்டாடிய சமத்துவ பொங்கல்- 3000 பேருக்கு பொங்கல் பரிசளித்தார்
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று தனது கொளத்தூர் தொகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடினார். 3000 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.
சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். அங்கு அவருக்கு வழிநெடுக கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
பின்பு அங்கு 2 திருமண மண்டபங்களில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் 3000 பேருக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை, புதுத்துணிகளை வழங்கினார்.
தொண்டர்கள், பயனாளிகள் மத்திய பேசிய ஸ்டாலின், பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உங்களோடு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது என்றார்.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள்
நேற்று கோவூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். இன்று உங்களை சந்திக்கின்றேன். வருகிற வழியில் ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டத்தை கண்டதும் நான் அவர்களிடம் சென்று ஆதரவு தெரிவித்து விட்டு வந்துள்ளேன்.
மீண்டும் தடை ஏன்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அப்போது தி.மு.க. ஆட்சியில் தடையை எதிர்த்து போராடினோம். அப்போது உச்சநீதிமன்றம் விதித்த சில வழிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதற்கு பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அந்த விதிமுறைகளை கடை பிடிக்காததால் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதித்தது.
மத்திய அமைச்சர்கள்
இதுபற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகம் வரும்போதெல்லாம் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்று சொல்லி விட்டு போகிறார். ஆனால் அந்த துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு இல்லை என்கிறார்.
திமுகவிற்கு துணை
ஜல்லிக்கட்டுக்காக தி.மு.க. போராட்டம் நடத்தியுள்ளது. இப்போது மாணவர்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். அது கண்டிப்பாக வெற்றியில் தான் முடியும்.
வரும் காலங்களில் நம் இனத்தை காக்க மொழி, நாகரீகம் பண்பாட்டை காக்க தமிழன் என்கிற நிலையில் நாங்கள் தமிழ் இனத்துக்காக பாடுபடுவதால் திமுகவிற்கு என்றும் நீங்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.
தீவிர போராட்டம்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வரும் நிலையில் தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. எனவே மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்களின் தீவிர போராட்டத்தை சந்திக்கும் சூழ்நிலை மத்திய-மாநில அரசுக்கு ஏற்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.