திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது: ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக காவல்துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தும் அவர்களின் குறைகளையும் கேட்டு வருகிறார். மூன்று கட்ட பயணத்தை முடித்த ஸ்டாலின். தற்போது சென்னையில் 4 ஆம் கட்ட பயணத்தை தொடங்கி உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக நேற்று விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்ற ஸ்டாலின் அங்குள்ள வியபாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் வியாபாரிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் 300 பேர் பங்கேற்றனர். அவர்களில் 25 பேர் தங்களது குறைகளை ஸ்டாலினிடம் எடுத்து கூறினார்கள். அவர்களிடம் பேசிய ஸ்டாலின், வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது உங்களது குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை சவுகார்பேட்டையில் வாழும் வட மாநில வணிகர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அந்த பகுதி வணிகர்கள் தங்கள் பகுதியில் திருட்டுகள் அதிகமாக நடப்பதாக தெரிவித்தனர். மேலும் காவல்துறையில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், இதனால், காவல் துறையினரின் கெடுபிடிகளைச் சந்திக்க நேரிடுவதாகவும் வியாபாரிகள் சிலர் புகார் தெரிவித்தனர்.
இதன் பின்னர் பேசிய ஸ்டாலின், திமுக எப்போதும் வட மாநில மக்களுடன் நட்புடன் இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால், காவல்துறை சுதந்திரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
தற்போதைய அதிமுக ஆட்சியில், முதலமைச்சரையோ, அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ வியாபாரிகள் சந்திக்க முடியாத நிலை உள்ளதாகக் குற்றம் சாட்டிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த நிலை மாறும் என்றும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications