ஆட்சியை கவிழ்க்க திமுகவிற்கு ஒரு நிமிடம் போதும்... திருவள்ளூர் கூட்டத்தில் வெடித்த ஸ்டாலின்!
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவிற்கு ஒரு நிமிடம் போதும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவள்ளூர் : அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவிற்கு ஒரு நிமிடம் போதும். ஆனால் கொள்ளைப்புறமாக ஆட்சியமைக்க திமுக விரும்பவில்லை என்று திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் திருவள்ளூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது : பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று போராடினோம். பல்வேறு கட்ட போராட்டங்களையடுத்து ரூபாய் கணக்கில் கட்டணத்தை உயர்த்திய அரசு பைசா கணக்கில் கட்டணத்தை குறைத்துள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணம் முழுவதையும் குறைக்கும் வரை எக்காரணம் கொண்டும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். மக்கள் மீது சுமத்தப்படும் கட்டண உயர்வுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம். போக்குவரத்து கழகங்களில் உதிரி பாகங்கள் வாங்குவது முதல் அனைத்திலுமே ஊழல் மலிந்து விட்டது.
ரெடியாகிவிட்டது தீர்ப்பு
18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது, இதை ஜோசியம் கேட்டு சொல்ல வேண்டியதில்லை. இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் காட்சி மாறும். செயல்படாத அரசை கலைக்கவில்லை என்று எதிர்க்கட்சியான எங்களைத் தான் மக்கள் திட்டுகிறார்கள்.
ஒரு நிமிடம் போதும்
ஆட்சியைக் கலைக்க திமுகவிற்கு ஒரு நிமிடம் போதும். ஆனால் கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆட்சியை ஒரு போதும் கவிழ்க்க மாட்டோம், தேர்தலை சந்தித்து ஜனநாயக முறையில் தான் ஆட்சி அமைப்போம்.
சம்பள உயர்வு தந்த ஈபிஎஸ்
ஆட்சிக்கு ஆபத்து பல ரூபங்களில் இருப்பதை உணர்ந்து தான் முதல்வர் பழனிசாமியும் சம்பள உயர்வைத் தந்து எம்எல்ஏக்களைத் தக்க வைத்துள்ளார். ஆனால் இது எத்தனை நாள் நீடிக்கும்.
சட்டசபையில் குற்றவாளி படம்
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை சட்டசபையில் திறந்து வைத்து மான்பை கெடுத்துவிட்டனர். இந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த நிகழ்ச்சியில் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் என யாருமே நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.