பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்: ஸ்டாலின்
திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சியினரின் மறியல் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் அனைத்துக்கட்சியினரின் மறியல் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். பேருந்து கட்டணத்தை குறைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் மறியலால் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணியாக வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அதிருப்தியில் போராடும் மக்கள்
கைது செய்யப்பட்ட பின்னர் ஸ்டாலின் பெரவள்ளூரில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது: குதிரை பேர ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஏழை, எளிய மக்கள் அதிர்ச்சியாகும் வகையில் பேருந்து கட்டணத்தை 67 சதவீதத்திற்கு மேல் உயர்த்தி இருக்கிறது. இதனைக் கண்டித்து கட்சித் தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைமையில் போராட்டங்கள்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து சாலைமறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தோம்.
கண்துடைப்பு நாடகம்
திடீரென நேற்று பேருந்து கட்டணம் குறைப்பு என்று கண்துடைப்பு செய்துள்ளனர். எதிர்க்கட்சிகள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். திமுக காலத்தில் 2 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம், 5 ரூபாயாக உயர்த்தப்பட்டு இப்போது அதில் 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து கட்டணம் 28 பைசாவாக இருந்தது இதுவரை 60 பைசா வரை உயர்த்தியது அதிமுக. இப்போது 38 பைசா வரை அதிகரித்து விட்டு 2 பைசா மட்டுமே குறைத்துள்ளனர்.
நிர்வகிக்கத் தெரியவில்லை
திமுக ஆட்சியில் கட்டண உயர்வு இல்லாத நேரத்திலும் 20 கோடி அளவிற்கு வருமானம் ஈட்டி பொதுமக்களின் நண்பனாக போக்குவரத்து கழகம் இருந்தது. எனவே கட்டண உயர்வு என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணமே தவிர போக்குவரத்து கழகங்களின் தோல்வியல்ல.
தீவிரமடையும் போராட்டம்
இந்த போராட்டம் மறியல் என்ற அளவில் முடியாது. மீண்டும் அரசுக்கு நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை, பேருந்து கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் தீவிரமடையும். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெற வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நிச்சயம் தொடர் போராட்டமாக அறிவிக்கப்படும். இதே போன்று பேருந்து கட்டணத்தை அதிகாரிகளே உயர்த்திக் கொள்ளலாம் என்ற முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.