சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: வரலாறு காணாத மழையால் பாதித்துள்ள தமிழகத்தை கருத்தில் கொண்டு, அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி (IAS and IPS ) உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் தலைநகரான சென்னை வரலாறு காணாத மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இது தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் உள்ள மாணவ- மாணவியர்கள், இளைஞர்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அனைத்தையும் இழந்ததோடு அவர்களும், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் மழை வெள்ள பாதிப்பில் சிக்கி இன்னும் மீள முடியாது திண்டாடுகிறார்கள்.
பிரதமரே வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மக்களின் நிலையை நன்கு தெரிந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மனநிலையிலோ அல்லது அதற்கான முன்னேற்பாடுகளிலோ இருக்கும் சூழல் முதன்மை தேர்வு எழுதுவோரிடம் இல்லை.
ஆகவே தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கும் அகில இந்திய சிவில் சர்வீஸ் வாய்ப்புகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க டிசம்பர் 18 முதல் நடைபெறும் முதன்மை தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.