ஆர்.கே.நகரில் குவிந்து கிடக்கும் ரூ. 2000 நோட்டு.. செல்லாததாக அறிவிக்க சீமான் அதிரடி!
ஆர்.கே. நகர் தொகுதியில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டிக்கிடக்கின்றன. பல நூறு கோடியை இறக்கியுள்ளனர் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனல் பறந்தது. செவ்வாய்கிழமை 5 மணியோடு முடிக்க வேண்டும் என்பதால் படு பரபரப்பாக வாக்கு சேகரித்தனர். பணத்தை பூராவும் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தினார் சீமான்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றுள்ளது. அங்கு வரலாறு காணாத வகையில் ஆளுங்கட்சியினரும், தினகரன் தரப்பினரும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரங்களுடன் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்திற்காக வாக்கு சேகரித்த சீமானின் பேச்சில் அனல் பறந்தது. 2000, 500 ரூபாய் நோட்டுக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இன்று இரவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவிப்பாரா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கேட்டுள்ளார்.
ரூபாய் நோட்டுக்கள்
ஆர்.கே.நகரில் பல நூறு கோடி ரூபாயை கொட்டியுள்ளனர். 2000, 500 ரூபாய் நோட்டுக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இன்று இரவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவிப்பாரா என்று கேட்டார் சீமான்.
|
அவ்வளவு நல்லவங்களாடா நீங்க
சில கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தான் வாக்கு பெறமுடியும் என நம்புகின்றன. இதனால் அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சி செய்கின்றனர். அவ்வளவு நல்லவங்களாடா நீங்க என்று கேட்டார் சீமான்.
ஸ்டாலினின் தத்துப் பிள்ளை
இதேபோல திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு வாக்கு சேகரித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். எனது தொகுதி கொளத்தூர் பக்கத்து தொகுதிதான். அந்த தொகுதி என் செல்லப்பிள்ளை, இது எனது தத்துப்பிள்ளை. விஐபி தொகுதி என்று கூறினர். ஜெயலலிதாவிற்காகவே இங்குள்ள மக்கள் ஓட்டு போட்டனர், ஆனால் கடைசியில் என்ன நடந்தது. அவருடைய மரணத்திற்குப் பிறகு இந்த தொகுதியை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.
எடுபிடியாக செயல்படுகிறார்
கன்னியாகுமரியில் புயல் பாதித்த போது மீனவர்களை சந்திக்க செல்லாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது பிரதமர் வருகிறார் என்ற உடன் ஓடியிருக்கிறார். பிரதமரை முதல்வர் வரவேற்க செல்வது மரபுதான் என்றாலும் அவரது எடுபிடியாகவே செயல்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார் ஸ்டாலின். 5 மணி முடியவே, நன்றி கூறிவிட்டு பிரச்சார வேனில் இருந்து இறங்கிச் சென்றார் ஸ்டாலின்.