ஏடிபி டென்னிஸ் போட்டியை புனேவுக்கு மாற்றுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின் வேதனை
சென்னை: சென்னையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக நடந்து வந்த ஏடிபி டென்னிஸ் போட்டி புனேவுக்கு மாற்றப்படுவதால் டென்னிஸ் ரசிகர்கர் ஏமாற்றம் அடைவார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' தெற்காசியாவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டித் தொடர் திடீரென்று இந்த வருடம் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்படுகிறது என்ற வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இந்த போட்டி கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது.
சென்னையில் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வரும் ரசிகர்களால் தமிழகத்திற்கு குறிப்பாக, சென்னை மாநகரத்திற்கு பெருமை கிடைத்து வந்தது. இந்த போட்டியை நடத்துவதற்கு தொடர்ந்து மாநில அரசின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டி அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது வேதனையளிக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியை புனேக்கு மாற்றி டென்னிஸ் ரசிகர்களையும், தமிழக டென்னிஸ் வீரர்களையும் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்குவது ஐ.எம்.ஜி. நிறுவனத்திற்கு அழகல்ல. வர்த்தக நலன் என்றெல்லாம் கூறி மாற்ற நினைக்கும் இந்த முயற்சியை இதுவரை கண்டிக்காமல், தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் மூலமாக தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசும் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
ஆகவே ஏ.டி.பி. டென்னிஸ் ஓப்பன் போட்டியை தொடர்ந்து சென்னையில் நடத்திட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.