தமிழகத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு என்ன ஆச்சு? விவரங்களை ஏன் வெளியிடவில்லை… ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு என்ன ஆச்சு என்ற மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அமைச்சர்கள், மாஜி தலைமைச் செயலாளர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைகளின் விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின விழாவில் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தொழிலாளர் உரிமைக்காக பாடுபட்டவர் திமுக தலைவர் கருணாநிதி என்பதையும், மே 1-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது திமுக ஆட்சியில் தான் என்பதையும் நினைவு கூர்ந்தார். மேலும், இந்தியாவிலேயே மே 1-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க முயற்சி எடுத்தவர் கருணாநிதிதான் என்று ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சி செய்து வருவதைக் குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற்ற வருமானவரிச் சோதனையின் பின்புலம் என்ன என்று கேள்வி எழுப்பினார். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், விஜயபாஸ்கர், அன்புநாதன், சைதை துரைசாமி வீடுகளில் நடந்த சோதனையின் விவரங்கள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அதே போன்று சோதனையில் கண்டுபிடித்தது என்ன என்பதற்கெல்லாம் பதில் அளித்தால் அதிமுகவின் பின்னணியில் பாஜக இல்லை என்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறினார்.
மேலும், மாநில சுயாட்சியில் பாஜக தொடர்ந்து தலையிட்டு வருவதை ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.