தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது... - ஸ்டாலின் காட்டம்
ஆளும் கட்சியினர் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகின்றனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஆளுங்கட்சியினர் இருக்கின்றனர். தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது, எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் குட்கா போன்ற போதை பொருளை எடுத்து வந்ததாக ஸ்டாலின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து குட்காவை பேரவைக்கு கொண்டுவந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வரும் 28ஆம் தேதி அவை உரிமை குழு கூடுகிறது.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
ஆளுங்கட்சிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே அதை தக்க வைத்துக்கொள்ள ஆள் ஆளுக்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் பிரச்சினையைப் பற்றி கவலையில்லை. இந்த சூழ்நிலையில்தான் குட்கா விவகாரம் தொடர்பாக அவை உரிமைக்குழுவை கூட்டியுள்ளனர்.
துக்ளக் தர்பார்
ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை எடப்பாடி அரசு இழந்துவிட்டது. அரசியல் காழ்ப்புணர்வுடன் உரிமை மீறல் குழுவை கூட்டியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். ஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்து அலைகின்றனர் தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடந்து கொண்டு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதையும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.
ஆளுநரிடம் கடிதம்
இதனிடையே ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தப்பின் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெரும்பான்மை இல்லை என தெரிந்த பின்னும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடவில்லை. ஆளுநரின் தாமதத்தை 19 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
கட்சித்தாவல் தடை சட்டம்
சட்டசபையில் நடைபெறாத நிகழ்வுக்கு சபாநாயகர் சார்பில் கட்சித் தாவல் சட்டத்தில் நோட்டீஸ் அளித்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் மனு அளிப்பது கட்சி தாவல் தடை சட்டத்தில் வராது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக விரோதம்
முதல்வரின் தூண்டுதல் பேரிலேயே சபாநாயகர் ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். பேரவை தலைவர் முதல்வராகி விடுவாரோ என்ற அச்சத்தில் அவரை வைத்தே எடப்பாடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெறும் போது ஆளுநர் உடனடியாக பேரவையை கூட்ட வேண்டும் என்றும், எடப்பாடி தலைமையிலான மைனாரிட்டி அரசை காப்பாற்ற சபாநாயகர் முயற்சி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.