கூட்டணிக்கு எந்த கட்சியையும் வெத்தலை பாக்கு வைத்து கூப்பிடலை.. பா.ம.க.வுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
சென்னை : எந்த கட்சியையும் கூட்டணிக்கு வெற்றிலை பாக்கு வைத்து நாங்கள் அழைக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
கேள்வி : மதுவிலக்கிற்காகபோராட்டம்நடத்தப்படுமா?
ஸ்டாலின்: கருணாநிதி இன்றைக்கு தெளிவாக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த மாவட்ட கழகத்தினுடைய செயலாளர்கள் தலைமையில், அமைதி வழியில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறப்போராட்டம் நடைபெறவிருக்கிறது.
கேள்வி : சேலம், கலிங்கப்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. ஆனால், காந்தியவாதி சசிபெருமாள் இறந்தபிறகும் கூட தமிழக அரசு இன்னும் குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லையே?
ஸ்டாலின்: அதை கண்டித்துதான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போகிறோம். நீங்கள் எந்த உணர்வோடு கேட்கிறீர்களோ அந்த உணர்வைத்தான் மதித்து, அந்த அடிப்படையில், அதை வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக தனது கவனத்தை இதில் செலுத்த வேண்டும், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித்தான் இன்றைக்கு தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே நடந்த சம்பவங்களையும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கண்டித்திருக்கிறார்.
கேள்வி : பூரண மதுவிலக்கை கொண்டுவரவேண்டும் என தி.மு.க. கோருகிறது. ஆனால், தி.மு.க-வினர் அதிகமான மது உற்பத்தி ஆலைகளை வைத்திருகிறார்கள். எனவே அதை மூட சொல்லுங்கள் என்று சீமான் தி.மு.க. மேல் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறாரே?
ஸ்டாலின்: சீமான் மட்டுமல்ல, ராமதாஸ் மற்றும் தமிழிசை சௌந்தரராஜனும் இதையேதான் சொல்கிறார்கள். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மதுவிலக்கு வந்துவிட்டால் மதுக்கடைகள் மாத்திரமல்ல, மது உற்பத்தி ஆலைகளும் மூடப்படும் என்ற காமன் சென்ஸ் அவர்களுக்கு இருந்தால் நல்லது.
கேள்வி : திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ராமதாஸ் கூறியிருப்பது பற்றி?
ஸ்டாலின்: நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாங்கள் எந்த கட்சியையும் கூட்டணி வேண்டும் வேண்டும் என்று வெத்தலைப் பாக்கு வைத்து அழைக்கவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.