தந்தி டிவி, புதிய தலைமுறை கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஒரு செட்டப்: ஸ்டாலின் தாக்கு
சென்னை: தந்தி டிவி, புதிய தலைமுறை ஆகியவை செட்டப் செய்யப்பட்டு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை, துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இன்றும் அவர் சென்னையில் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கிடையே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

திமுக
திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இது குறித்து அறிந்த அதிமுக தோல்வி பயத்தால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள் பணப் பட்டுவாடா குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. அந்த அதிகாரிகள் யார், யார் என்று பெயர் பட்டியல் தயாரித்துள்ளோம். மே 19ம் தேதிக்கு பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா திடீர் என சென்னையில் வீதி, வீதியாக பிரச்சாரம் செய்ததற்கு தோல்வி பயமே காரணம். அதிமுக வெற்றி பெறாது என்பது ஜெயலலிதாவுக்கே தெரிந்துவிட்டது.

மோடி
பிரதமர் மோடியின் பிரச்சாரத்தால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது. திராவிடக் கட்சிகளை விமர்சித்து அரசியல் செய்ய வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. தந்தி டிவி, புதிய தலைமுறை ஆகியவை செட்டப் செய்யப்பட்டு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது எல்லாம் எங்களுக்கு நான்றாக தெரியும்.

க.க.க.
திமுக ஆட்சிக்கு வந்தால் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சியை அளிப்போம். பணப்பட்டுவாடா செய்ய வசதியாக மின்வெட்டு ஏற்படுத்திய அதிகாரிகள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

பணப்பட்டுவாடா
திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி நடந்தால் எங்கு நடக்கிறது என்று கூறுங்கள். ஒரு திருடன் தான் தப்பிக்க பிறரை பார்த்து திருடன், திருடன் என்று கத்துவது போல் தான் இந்த குற்றச்சாட்டு.












Click it and Unblock the Notifications