மதுரை தேவர் சிலையை ஜெயலலிதா அகற்றுவார்.. பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய மு.க.ஸ்டாலின்
மதுரை: திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் வைக்கப்பட்ட சிலை என்பதால் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையைக் கூட ஜெயலலிதா அகற்ற முயற்சிக்கலாம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்குலத்தோர் சமூகத்தினர், இன்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையைக் கொண்டாடி வரும் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு ஸ்டாலின் பேசியிருப்பது தேவையற்றது என்று அதிமுகவினர் கோபமடைந்துள்ளனர்.
இன்று மதுரை வந்த மு.க.ஸ்டாலின் கோரிப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சி வந்தது முதல் சாதனைகள் செய்கிறார்களோ இல்லையோ திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்குவதே தலையாய கடமையாக கொண்டு செயல்படுகிறது.
இந்த தேவர் திருமகனார் சிலையை தலைவர் தலைமையில் 74ல் ஜனாதிபதி விவி.கிரி திறந்து வைத்தார். இந்த வரலாற்றுச் செய்தியை மறைக்கும் உள் நோக்கத்துடன் நயவஞ்சகத்துடன், அரசியல் உள் நோக்கத்துடன் சிலை அமைத்த தலைவர் கலைஞர் பெயரை நீக்கவேண்டுமென்றே நடந்து வருவதாகவும், கண்ணகி சிலையை அப்புறப்படுத்த முயற்சித்தது போல இந்த தேவா் சிலையை கூட ஜெயலலிதா அகற்ற முயற்சிக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.