மாட்டுக்கறிக்கு தடையா.. மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்.. ஸ்டாலின், கனிமொழி பங்கேற்பு
மாட்டுக்கறிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், உத்தரவை திரும்பப் பெறக் கோரியும் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழகம் மெளனம் காத்து வருகிறது. மேலும், இந்த சட்டத்தை படித்துப் பார்த்து பதில் சொல்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.