ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க சத்துணவு திட்டங்களிலும், ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் 18 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் தென்னை பயிரிடப்பட்டாலும் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 92 சதவீத தேங்காய் உற்பத்தியாகிறது. ஆனாலும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மிக குறைவாகவே செய்யப்படுகிறது.
கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதாக தவறான தகவல் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தத் தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் தற்போது தேங்காய் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தேங்காய் விலை ரூ.15 முதல் ரூ. 28 ஆக இருந்தது. ஆனால், தற்போது ஒரு தேங்காய் ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
ஒரு கிலோ கொப்பரை தேங்காயை ரூ. 59-க்கு தமிழக அரசே கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேங்காயில் இருந்து கொப்பரை எடுத்து விற்பனை செய்யும் அளவுக்கு விவசாயிகளிடம் தொழில்நுட்பம் பிரபல்படுத்தப்படவில்லை. எனவே, கொப்பரை கொள்முதல் நிலையங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மாறாக ஆளுங்கட்சியினரும், சில கொப்பரை வியாபாரிகள் மட்டுமே பயனடைகின்றனர்.
சத்துணவு திட்டத்துக்கும், ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யவும் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனர்.
தமிழக விவசாயிகள் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் போது வெளிநாட்டு விவசாயிகளுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படக் கூடாது. எனவே, சத்துணவுத் திட்டத்துக்கும், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும். தென்னை விவசாயமும் செழிக்கும். தென்னை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தததும் அதுபற்றி கவலைப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் எந்த கெடுதலும் இல்லை என்பதை தகுந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் தேங்காய் எண்ணெய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.