உங்களுக்கெல்லாம் ஏதாச்சும் பிரச்சினை இருக்கா?... அல்வா சாப்பிட்டுக் கொண்டே குறை கேட்ட ஸ்டாலின்
நெல்லை: நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகத்தில் அலை பரப்ப ஆரம்பித்திருக்கும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நெல்லை டவுன் பகுதியில் முகாமிட்டு மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினார். புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா வாங்கிச் சாப்பிட்ட அவர் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்களிடம் குறை கேட்டார்.
நெல்லை டவுனில் வியாபாரிகள், பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மணிக்கு வந்தார். அப்போது இருட்டுக்கடை அல்வா சாப்பிட வேனில் இருந்து இறங்கி நடந்தார்.
திமுக தொண்டர்களும், மக்களும் அங்கு திரளாக கூடியிருந்ததால், கூட்டத்திற்குள் அவரால் நடந்து செல்ல முடியவில்லை. இதைத் தொடர்ந்து திமுகவினர் மற்றும் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
ரசித்து ருசித்து
இருட்டுக்கடைக்கு வந்து அங்கு அல்வா வாங்கிய ஸ்டாலின் நின்ற படியே அதை எடுத்து வாயில் வைத்து ரசித்துச் சாப்பிட்டார். பின்னர் அல்வா விற்பனையெல்லாம் எபபடி என்பது குறித்தும், வியாபாரிகளுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
பாளையங்கோட்டையில் மக்கள் சந்திப்பு
அல்வா சாப்பிட்டு முடித்த பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புளைச் சேர்ந்தவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் 15 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பேசினார்கள்.
குவிந்த கோரிக்கைகள்
அப்போது பலரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கணினி பயன்பாட்டுக்கு தொகுப்பூதியத்தில் பணியாளர்களை நியமிக்கும் முறையை ரத்து செய்து விட்டு நிரந்தர கம்ப்யூட்டர் பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய வரைமுறையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பல்வேறு சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.மனுக்களை பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
உணர்வுகள் பரிசீலிக்கப்படும்
பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் உணர்வுகளை தெரிவித்து உள்ளீர்கள். நீங்கள் கொடுத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். அரசு திட்டங்களை செயல்படுத்தக் கூடியவர்கள், நீங்கள்தான். உங்களை ஊக்கப்படுத்துவது அரசின் கடமை என்றே நான் கருதுகிறேன்.
இன்னும் 8 மாதம்தான்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்களை விட நீங்கள் அதிகம் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள். அதாவது இரவு 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்த கூட்டம், இரவு 11 மணிக்குத்தான் நடத்தப்படுகிறது. அதுவரை நீங்கள் பொறுமை காத்து கோரிக்கை மனுக்களை கொடுத்து இருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது.
தொடரும் தற்கொலைகள்
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி மேலிடத்தில் கொடுக்கப்பட்ட நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதே போல் தமிழ்நாட்டில் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பெண் போலீஸ்அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து இருக்கிறார்.
கண்டுகொள்ளாத அதிமுக அரசு
குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இளைஞர் படையினர், போலீசாருக்கு இணையாக ஊதியம் வேண்டும் என போராட்டம் நடத்துகிறார்கள். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அதிமுக ஆட்சி கண்டு கொள்வதாக தெரியவில்லை.
நாங்க இருக்கோம்...!
அரசு ஊழியர்களுக்கு திமுக எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்கும். எங்கள் தேர்தல் அறிக்கையிலும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் சேர்க்கப்படும். நீங்கள் விரும்பும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன், உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார் ஸ்டாலின்.