திரைத்துறையினர் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலினை அழ வைத்த ரஜினி..!!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக திரைத்துறையினர் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினியின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் கண் கலங்கினார்.
Recommended Video
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக திரைத்துறையினர் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினியின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் கண் கலங்கினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதி மறைவுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
இதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் மிக ஆவேசமாக பேசினார். கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. கலைஞர் தமிழகத்துக்கு பெரிய அடையாளமாக இருந்தார்.
ரஜினி ஆவேசப் பேச்சு
இனிமேல் மற்ற மாநிலங்களில் உள்ள பெரிய தலைவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சந்தித்துவிட்டு போக நினைக்கும் அளவுக்கு தலைவர்கள் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.45 வயதில் கழகத்துக்கு தலைமை ஏற்று எத்தனையோ சோதனைகள், சூழ்ச்சிகள், துரோகங்கள் மத்தியில் 50 ஆண்டுகள் கழகத்தை கட்டிகாப்பாற்றினார்.
என்னை எதிர்கொள்
அரசியல் களத்தில் பழைய ஆட்களாகட்டும், புதியவர்களாகட்டும் அவர்களிடம் முதலில் என்னிடம் நட்பு கொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் புகுந்து விளையாடினார்.
எம்ஜிஆர் போட்டோ பக்கத்தில்
யாரும் தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது. அ.தி.மு.க. ஆண்டு விழாவுக்கு புரட்சித்தலைவர் போட்டோ வைக்கிறார்கள். பக்கத்திலேயே கருணாநிதியின் புகைப்படமும் வைக்க வேண்டும். ஏன் என்றால் அ.தி.மு.க. உருவானது டாக்டர் கருணாநதி.
நானே போராடியிருப்பேன்
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது. மேல்முறையீடுக்கு போகவில்லை. மேல்முறையீடுக்கு போய் இருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் என ஆவேசமாக கூறினார் ரஜினிகாந்த்.
கண் கலங்கிய ஸ்டாலின்
கடைசியாக இறுதி சடங்கில் ஸ்டாலின் குழந்தை மாதிரி கண்ணீர் விட்டதை என்னால் தாங்கமுடியவில்லை. உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். ஆண்டவன் இருக்கிறான். அப்பா வந்த பாதை உங்களை வழி நடத்தும். வருத்தப்பட வேண்டாம் என ரஜினி காந்த் கூறியதை கேட்ட ஸ்டாலினுக்கு துக்கம் அடைத்துக்கொண்டு கண் கலங்கியது.
பலமுறை கதறிய ஸ்டாலின்
இதைத்தொடர்ந்து ஸ்டாலினை கட்டித் தழுவி ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது கோபாலபுரம் வீட்டில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டபோது, கருணாநிதி மறைந்தபோது, அவரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கிடைத்த போது, பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுததை கண்டு அவரது ஆதரவாளர்களும் கதறியது குறிப்பிடத்தக்கது.