அம்பேத்கர் சிலைக்கு தொல். திருமாவளவனுடன் சேர்ந்து மாலை அணிவித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, திமுக பொருளாளர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இணைந்து ஒரே நேரத்தில் மாலை அணிவித்தனர்.
சட்டமேதை அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர், தலித் தலைவர்கள் என கட்சி பேதமின்றி அனைவரும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் , மதிமுக பொதுச்செயலாளர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மரியாதை அணிவித்து செலுத்தினார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த இந்த தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டினர்.
பின்னர் அனைவரும் சென்ற நிலையில் திருமாவளவன் மட்டும் அங்கு தொண்டர்களுடன் இருந்தார். அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்த திமுக பொருளாளர் ஸ்டாலின் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது மேடையில் ஸ்டாலினுடன் திருமாவளவனும் இணைந்து நின்றிருந்தார். கடந்த லோக்சபா தேர்தல் வரை திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவன், திடீரென்று கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்று கூறி கூட்டணியை விட்டு வெளியேறினார். அவரது முயற்சியில் மக்கள் நலக்கூட்டணி உதயமானது. இந்த கூட்டணியில் மதிமுக, தேமுதிக, தமாகா இணைந்து வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஸ்டாலினும், திருமாவளவனும் நேருக்கு நேராக சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.