வங்கிகளில் கியூவில் நிற்கும் மக்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் - மு.க.ஸ்டாலின்
வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும் பொது மக்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: வங்கிகளில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு திமுக தொண்டர்கள் உதவிகளை செய்து தர வேண்டும் என அக்கட்சியின் பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அயனாவரம் மார்க்கெட், கொளத்தூர் தொகுதி பெரம்பூர் இந்தியன் வங்கி, ஜவகர் நகர் அலகாபாத் வங்கி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தங்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டலின், வில்லிவாக்கம் தொகுதியில் அயனாவரம் மார்க்கெட் பகுதியில் இன்று காலை ஆய்வு நடத்தினேன். அங்கு இருக்கின்ற வியாபாரிகள் தங்களுடைய கஷ்டங்களை எடுத்துச் சொன்னார்கள். 500 ரூபாய் ஒருவருக்கு வியாபாரம் ஆகிவந்த நிலையில் தற்போது 100,150,200 ரூபாய் கூட வியாபாரம் ஆகவில்லை என வருத்தப்பட்டு சொன்னார்கள்.
காரணம் என்னவென்றால், யாரிடமும் 100 ரூபாய் 50 ரூபாய் நோட்டுகள் இல்லை, எல்லோரும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் எடுத்து வருகிறார்கள். அதற்குகூட எங்களால் சில்லறை கொடுக்க முடியவில்லை என வருத்தப்பட்டு என்னிடம் சொன்னார்கள். அதுமட்டுமல்ல வங்கிகளில் மக்கள் தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு காலையிலிருந்து இரவு வரை வரிசையில் நிற்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மத்திய அரசு ஒருவாரத்தில் சரியாகிவிடும் என சொல்லியிருந்தார்கள்.
ஆனால் மீண்டும் நேற்று இன்னொரு வாரகாலம் ஆகும் என சொல்லியிருக்கிறார்கள். முதலில் 4000 ரூபாய் வரை வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம் என சொல்லப்பட்ட நிலையில் இன்றைக்கு 2000 ரூபாய் மட்டும் தான் எடுக்க முடியும் என அறிவித்திருப்பது மருத்துவமனை செலவுகளுக்கு, வீட்டில் சாப்பாட்டிற்கு அரிசி, காய்கறிகள் கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பெண்கள் சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றது. சொந்தப் பணத்தை எடுப்பதற்கு மை வைக்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு எல்லோரும் வேதனைப்படுகிறார்கள்.
இதையெல்லாம் நேரில் பார்த்தேன். ஏனெனில் அரசு இது சம்பந்தமாக எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை, இது சம்பந்தமாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. முதல்வரை பொறுத்தவரையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தாலும் அவருடைய இலாக்காக்களை முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்க ஓ. பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி அவர் அறிக்கை வெளியிடாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தலைமைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளராவது ஒரு அறிக்கை விட்டிருக்க வேண்டும். எந்தவிதமான அறிக்கையும் கிடையாது.
அதுமட்டுமல்ல கூட்டுறவு வங்கிகளில் மத்திய அரசு பண பரிவர்த்தனை செய்யக் கூடாது என அறிவித்த காரணத்தால் விவசாய பெருமக்கள் பணம் எடுக்க முடியாத சூழல்உருவாகி இருக்கின்றது. இதையெல்லாம் மத்திய அரசு உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை. கருணாநிதி உட்பட எல்லோரும் இது சம்பந்தமாக வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறோம். ஆனால் இதை அமல்படுத்துகிற முறையில் தான் சிக்கல்கள் இருக்கின்றது.
இதையெல்லாம் முறைப்படுத்திவிட்டு, இதையெல்லாம் சரிசெய்வோம் என்ற நம்பிக்கையோடு இந்த திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. அதனால் தான் சொன்னேன், ஆபரேஷன் பொறுத்தவரையில் சக்ஸஸ் பேஷன் டெட் என்று கூறினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.