நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க விசாரணைக்குழு ஏன்? சிபிஐ விசாரணை தேவை- ஸ்டாலின்
நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி, பல்கலைக்கழகத்தில் உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்துவது மற்றும் தவறாக வழிநடத்துவது தொடர்பான ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த ஆடியோ காட்சி மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த மேலிடத்திற்கு இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்.
கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இன்று தீரன் சின்னமலையின் 262ம் பிறந்தநாளை தொடர்ந்து கிண்டியில் அவரது உருவசிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளதாக கூறினார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசராணை நடத்த வேண்டும் என்றும், அப்போது தான் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார்.