அமைச்சர் சரோஜாவை உடனே டிஸ்மிஸ் செய்யுங்க... முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!
அமைச்சர் சரோஜாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் சரோஜாவின் ஊழல்களை தட்டிக்கேட்க முதல்வர் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவினால் நேரடியாக பணியில் நியமிக்கப்பட்ட மீனாட்சி என்பவரிடம் அமைச்சர் சரோஜா 10 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் தருமபுரியில் குழந்தைகள் நல அதிகாரியாக உள்ள மீனாட்சி சென்னைக்கு இடமாறுதல் கேட்டுள்ளார்.
இதையடுத்து மீனாட்சியை தனது வீட்டிற்கு நேரடியாக வரவழைத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார் அமைச்சர் சரோஜா. மீனாட்சியிடம் ரூ.30 லட்சம் கேட்டு சரோஜா மிரட்டல் விடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சூட்டைக் கிளப்பும் புகார்
அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் என அனைவரையும் ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியான மீனாட்சியே புகார் அளித்ததால் இந்த விவகாரம் தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளது.
டிஸ்மிஸ் செய்யுங்க
அமைச்சரின் பேச்சுக்கும் மிரட்டலுக்கும் பாஜக உட்பட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பெண் அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய அமைச்சர் சரோஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் முன்வர வேண்டும்
அதிகாரி மீனாட்சி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க முதல்வரின் நடவடிக்கை தேவை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். சரோஜாவின் ஊழல்களை தட்டிக்கேட்க முதல்வர் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியின் மிகப்பெரிய அவலம்
அனைத்திலும் ஊழல் என்பது அதிமுக ஆட்சியின் மிகப்பெரிய அவலம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அமைச்சர்கள் வரிசைக்கட்டி ஊழல் புகார்களில் சிக்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.