ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்…. ஸ்டாலின் கோரிக்கை
கதிராமங்கலம் கிராமத்தில் அமைதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்
சென்னை: ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் 11 நாட்களாக கதிராமங்கலம் கிராமத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்களமாக விளங்கி வரும் இங்கு அமைதியை கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது ஓஎன்ஜிசி. கடந்த மாதம் 30 ஆம் தேதி விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதனை அடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததோடு, 9 பேரை கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் 11 நாட்களாக முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி
இந்நிலையில், இன்று இதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. கதிராமங்கலத்தில அமைதி திரும்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம்
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரக் கூடாது என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை சட்டசபையில் கொண்டு வர வேண்டும் என்றும் அப்படி கொண்டு வந்தால் அதனை திமுக ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் பதில்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எம்.சி. சம்பத், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதி வழங்காது என்றும் அமைச்சர் பதில் அளித்தார்.
மத்திய அரசுக்கு கடிதம்
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் பிரச்சனை விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.