உலக முதலீட்டாளர் மாநாடு குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்!- முக ஸ்டாலின்
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்த நன்மைகள் என்ன? என்பது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், "உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தனதாக அறிவிக்கப்பட்டது. அதன் நிலை என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சம்பத், "98 ஒப்பந்தங்களில் 60 ஒப்பந்தங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. 7 ஒப்பந்தங்களுக்கான திட்டங்கள் முழுமையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 48 ஆயிரத்து 148 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.
"இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக தமிழகத்துக்கு கிடைத்துள்ள நன்மைகள் என்ன என்பது பற்றிய வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்," என்று முக ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் சம்பத், "அதற்கு அவசியம் இல்லை," என்றார்.