ஜெயேந்திரர் மறைவுக்கு கி.வீரமணி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் இரங்கல்
காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: ஜெயேந்திர சரஸ்வதி மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை உடல்நலக் குறைவால் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறல் பிரச்னையால் ஜெயேந்திரர் அவதிப்பட்டு வந்துள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆழ்ந்த இரங்கல்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காஞ்சி காமகோடி பீடாதிபதி மரியாதைக்குரிய ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக் குறைவால் திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், அவரை இழந்து வாடும் அவருடைய விசுவாசிகள் அனைவருக்கும் காஞ்சி சங்கரமடப் பணியாளர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கி. வீரமணி இரங்கல்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காஞ்சி சங்கரமடத்து மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை தனது 83 வது வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவருடனும் அவரது மடத்துடனும் திராவிடர் கழகத்துக்கு எவ்வளவு மலையளவு கருத்துக்கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், திராவிடர் கழகம் அவரது மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.
துயரம் அடைந்தேன்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இச்செய்தி கேட்டு வேதனையும் துயரமும் அடைந்தேன். காஞ்சி ஜெயேந்திரர் மடாதிபதி என்பதைக் கடந்து கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளைத் தொடங்கி சேவை நோக்கத்துடன் நடத்தி வந்தார்.
அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு
காஞ்சி மடத்தின் சார்பில் ஏராளமான தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வந்தார். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த், வைகோ இரங்கல்
இதே போல் ஜெயேந்திரர் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதன்வந்திரி பீடம் இரங்கல்
ஜெயேந்திரர் மறைவுக்கு வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் முரளிதர ஸ்வாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி சங்கராச்சாரியர் பூஜ்ய ஸ்ரீ ஜெயந்திரசரஸ்வதி ஸ்வாமிகளின் முக்தி ஈடு செய்ய முடியாத இழப்பு. என்ணிலாடங்க பக்தர்கள் மனதில் இடம் பெற்று மேலும் வாழ்வார் என்று கூறியுள்ளார். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில் கூட்டு பிரார்த்தினை நடைபெற்றது