கல்யாண வீட்டில் வைத்து முக்கால் மணி நேரம் சிரிக்க சிரிக்க பேசிக் கொண்ட ஸ்டாலின்- வாசன்!
மதுரை : சட்டசபை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசனும் மதுரையில் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
அரசியல் அரங்கில் தலைவர்களின் எதிர்பாராத சந்திப்புகள் பல எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது உண்டு.
அந்த அடிப்படையில் மதுரையில் மு.க.ஸ்டாலின்- ஜி.கே.வாசன் ஆகியோர் சந்தித்து கொண்டது வரும் காலத்தில் அரசியல் மாற்றத்துக்கான அச்சாரமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மகளுக்கும், த.மா.கா. முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி. சித்தனின் பேரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் திருமணம் மதுரையில் நடந்தது.
திருமண விழாவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வந்திருந்தார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும், தனது மனைவி சுனிதாவுடன் வந்திருந்தார்.
ஜி.கே.வாசன் முன் கூட்டியே வந்திருந்தார். மு.க.ஸ்டாலின் மண்டபத்துக்குள் வந்ததும் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு தலைவர்களும் சுமார் 40 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
இருவரும் மனம்விட்டு ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். மக்கள் நலகூட்டணியில் இருந்து வெளியேறிய த.மா.கா. உள்ளாட்சி தேர்தலில் எடுக்கப்போகும் நிலைப்பாடு தெரியவில்லை. இந்த நிலையில் இந்த திடீர் சந்திப்பும், உரையாடலும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக அமைந்தாலும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி அவர்களின் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் முயன்றனர். ஆனால் இரு தலைவர்களும் பேட்டியை தவிர்த்து விட்டனர்.
திருமணம் முடிந்ததும் ஸ்டாலின் முதலில் புறப்பட்டார். அவரிடம் இந்த சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பதில் ஏதும் கூறவில்லை. ஜி.கே.வாசனிடம் கேட்டபோது, திருமண வீட்டில் அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றார்.
மக்கள்நலக் கூட்டணியில் இருந்து தமாகா விலகியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட த.மா.கா. காத்திருந்தது. ஆனால், திமுகவில் காங்கிரஸ் இருந்த காரணத்தால் அந்த கூட்டணிக்கு செல்ல முடியவில்லை.
அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது, 'சீட்' பங்கீடு உள்ளிட்ட காரணங்களால் கூட்டணி வைக்க த.மா.கா. விரும்பவில்லை. வேறுவழியின்றி மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு வாஷ் அவுட் ஆனது.
மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்த போதே பல முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பலரும் கட்சி தாவ தயாராக இருப்பதாக பேசப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட விரும்பவில்லை என்று வாசன் அறிவித்தார்.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் ஸ்டாலின், வாசன் சந்தித்து பேசியுள்ளது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. - த.மா.கா. கூட்டணிக்கு அச்சாரமாக அமையும் என தொண்டர்கள் நம்புகின்றனர். அதேநேரத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இதனை ஏற்குமா என்பதே கேள்வியாகும்.