2019ல் இந்திய பிரதமராக ராகுல்... தமிழக முதல்வராக ஸ்டாலின் - அடடே குஷ்பு
2019ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பார் என்றும் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி வகிப்பார் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை: 2019ல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினும், இந்தியாவின் பிரதமராக ராகுலும் பதவியேற்பார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதே குஷ்புதான் திமுகவில் இருந்த போது, கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மேலும் திமுகவுக்கு அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறினார்.
அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். கட்சியின் நலனுக்கு யார் பொறுத்தமாக இருப்பார்களோ அவர்களை உட்கட்சி தேர்தல் நடத்திதான் தலைமை பதவிக்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியிருந்தார். இந்த கருத்து திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து பட்டினபாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் கற்கள் வீசப்பட்டன. அந்த நேரத்தில் திருச்சியில் இருந்த குஷ்புவின் கார் மீது செருப்பு வீசப்பட்டது. திருச்சி விமான நிலையம் வந்த குஷ்புவை எதிர்த்து திமுகவினர் முழக்கமிட்டனர்.
இதனால் வெறுப்படைந்த குஷ்பு, ஆளை விட்டால் போதும் என்று திமுகவில் இருந்து விலகினார். அப்போது இது குறித்து கருத்து கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழகத்தில் காங்கிரஸ் பூஜ்யம் தான் அதை ஒதுக்கி வைத்து விட்டால் நாம் ஜெயித்து விடலாம் என்று நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் பூஜ்யம் ஆகி விட்டார்கள். காங்கிரஸ் மீது பழிபோட்டு தப்பி விடலாம் என்ற கனவு கண்டீர்கள். எல்லாம் கலைந்து விட்டது. இப்போது அங்கு இருந்து ஒரு பூ வும் போய் விட்டது என்று பேசினார்.
இப்போது அதே குஷ்புதான் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார் என்று கூறியுள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழாவில் பேசிய குஷ்பு, 2019ல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினும், இந்தியாவின் பிரதமராக ராகுலும் பதவியேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.