கொளத்தூர் தொகுதியில் 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஸ்டாலின்!
சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
கன்னியாகுமரிக்கு பிரசார பயணம் செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது:
கரூரில் ஆளும் கட்சி பிரமுகர்கள் பல கோடி அளவுக்கு பணம் பதுக்கி வைத்த விவகாரத்தை மூடி மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சி செய்தது. அதையும் மீறி அந்த செய்தி வெளியே வந்துவிட்டது.
உளவுத்துறை, தேர்தல் ஆணையத்தோடு கைகோர்த்து கொண்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. கரூரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே தாமதம் செய்தது. இனியாவது தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், தவறு செய்தோர்கள் மீது கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், வரும் 27ம் தேதி தான் போட்டியிட உள்ள கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.