சட்டசபை தாக்குதல் சம்பவம்.. பிப்.23-ல் ஜனாதிபதியை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின் !
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர்.
சென்னை: நம்பிக்கை வாக்கெடிப்பின் போது சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட உள்ளனர்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த வியாழக்கிழமை பதவியேற்றார். அவரது அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், எதிரணியாக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தியது.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்தரப்பினரின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு கோரியதற்காக திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் வலுக்கட்டாயமாக போலீசாரால் வெளியேற்றப்பட்டார்.
அப்போது, அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். பின்னர் கிழிந்த சட்டையுடன் ஆளுநர் மாளிகை சென்றார் ஸ்டாலின். அங்கு ஆளுநரை சந்தித்து புகார் அளித்தார்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் திமுக முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிடவும் நேரம் கேட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஸ்டாலினை சந்திக்க பிரணாப் முகர்ஜி நேரம் ஒதுக்கியுள்ளார். ஸ்டாலினுடன் தி.மு.க., எம்.பி.,க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர். இந்த சந்திப்பின் போது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்தவை குறித்தும், திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டது குறித்தும் ஜனாதிபதியிடம் முறையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.