சசிபெருமாள் இறுதிச்சடங்கில் தி.மு.க. சார்பில் ஸ்டாலின் கலந்துகொள்வார்.. கருணாநிதி தகவல்
சென்னை : வெள்ளிக் கிழமை நடைபெறும் சசிபெருமாள் இறுதிச்சடங்கில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சசிபெருமாள் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக தி.மு. கழகம் என்றைக்கும் துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் அவர்கள் கடந்த 23-7-2015 அன்று சென்னையில் என் இல்லத்தில் என்னை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என்று நான் விடுத்த அறிக்கைக்காக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
அவரது குழுவினருடன் என்னைச் சந்தித்த அவர் நீண்ட நேரம் மதுவிலக்கைப் பற்றியே பேசியதோடு, தமிழகத்தில் மாத்திரமல்லாமல் அகில இந்திய அளவில் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் என்னிடம் கூறினார்.
அதன்பிறகு கீழே இறங்கிச் சென்ற அவர், கோபாலபுரம் இல்லத்து வாயிலிலேயே அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் எனக்கு நன்றி தெரிவித்த விவரங்களையும் கூறிவிட்டுத் தான் சென்றார்.
ஆனால் அவர் என்னைச் சந்தித்து சென்ற பிறகு, அடுத்த வாரமே 31-7-2015 அன்று குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மது விற்பனைக் கூடத்தை மூட வேண்டுமென்ற போராட்டத்திலே ஈடுபட்டு, அதன் காரணமாகவே எதிர்பாராதவிதமாக பலியான தியாக வரலாற்றினைக் கண்டும் கேட்டும் சொல்லொணா துயரை அடைந்ததோடு அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் விடுபட முடியாத நிலையிலே இருக்கிறோம்.
31 ஆம் தேதி அவர் மறைந்த போதிலும், ஒரு வார காலமாக அவருடைய இறுதி அடக்கம் கூட நடைபெற முடியாத நிலையில் இன்றுதான் அவருடைய உடல் அவருடைய குடும்பத்தினரால் பெறப்பட்டு, 7-8-2015 அன்று அவருடைய இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
இந்த நேரத்தில் அவர் என்னைச் சந்தித்து உரையாடிய அந்த நினைவுகள்தான் என் உள்ளத்தை ஆக்ரமித்துள்ளது. அவரது இறுதி சடங்கில் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் அவருடைய குடும்பத்தாரின் துக்கத்தில் தி.மு. கழகமும் பங்கேற்கிறது என்பதை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்வதோடு, சசிபெருமாள் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக தி.மு. கழகம் என்றைக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
இதனிடையே சசிபெருமாளின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ள சம்மதித்ததையடுத்து, அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நாளை (வெள்ளிக்கிழமை) அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.