உங்களில் ஒருவன்... உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி பாணியில் கடிதம் எழுதும் ஸ்டாலின்
உடன்பிறப்பே கடிதம் படிக்காமல் உற்சாகம் இழந்திருந்த திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி பாணியில் 'உங்களில் ஒருவன்' என்று கடிதம் எழுத ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின்.
சென்னை: "தமிழகத்தில் இன்று அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியும், முடக்கமும் தொடர்கிறது. இந்நிலையில் சென்ற முறை ஏமாந்துபோன தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நம் பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கான பணிகளை நாம் சிரம் மேல் தாங்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். வேண்டுகோள் விடுக்கிறார்கள். மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நமது செயல்பாடுகள் தொடர வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் திமுகவின் செயல்பாடுகள் இருக்கும்" என்று கடிதம் எழுதியுள்ளார் செயல் தலைவர் ஸ்டாலின்.
முரசொலி நாளிதழில் தினசரியும் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார் திமுக தலைவர் கருணாநிதி. முரசொலி பவளவிழா கொண்டாடும் இந்த நேரத்தில் கருணாநிதி உடல்நலக்குறைவினால் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருணாநிதியின் கடிதம் படிக்காமல் தொண்டர்கள் உற்சாகம் இழந்திருப்பதாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திலும் குறிப்பிட்டிருந்தோம். அந்த குறையை போக்கும் வகையில் இப்போது செயல் தலைவர் ஸ்டாலின் 'உங்களில் ஒருவன்' என்று கடிதம் எழுதியுள்ளார்.
கட்சித் தொண்டர்களின் சங்கிலித் தொடர் போன்ற வருகையும், வாழ்த்தொலியும் நெஞ்சத்தில் தேனாகப் பாய்கிறது. நாம் காண்கிற களங்களும், நாளை பொறப்போகிற வெற்றிகளுக்கும் இன்று கிடைக்கும் ஊக்கமிகு வாழ்த்தொலியாகவே உங்கள் அன்பை கருதுகிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
கருணாநிதி பாணியில் கொஞ்சம் எழுதினாலும், தனது ஸ்டைலையும் புகுத்தி எழுதுவது தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறதாம். அதே நேரத்தில் தலைவர் கருணாநிதி போல கடிதம் மூலம் தொண்டர்களை கவருவரா? எதிர்கட்சியினரை விமர்சிப்பாரா? போகப் போக தெரியும்.