நாளையிலிருந்து எல்லோரும் வேட்டி கட்டுங்க.. அழைக்கிறார் ஏ.சி.எஸ்.!
சென்னை: சர்வதேச வேட்டி தினம் நாளை கொண்டாடப்படுவதால் நாளை முதல் தமிழர்கள் அனைவரும் வேட்டி கட்டும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று பெரும்பாலான நேரங்களில் பேன்ட், சர்ட், கோட் சூட்டில் காணப்படும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஜனவரி மாதம் 6 ம் தேதி வேட்டி தினம் என்று உலகப் பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனஸ்கோ அமைப்பினால் அறிவிக்கப்பட்டு, ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வேட்டி இந்தியர்களின், குறிப்பாக தமிழக மக்களின் பாரம்பரிய உடையாகும். இது நமது பண்பாட்டின் அடையாள சின்னமாகும். ஆண்கள் பேன்ட், ஜீன்ஸ் ஆகியவற்றை அணிந்து கொண்டு வருவதைவிட, வேட்டியை உடுத்திக் கொண்டு செல்லும் போது, அங்கே ஆண்மையின் கம்பீரமான ஆளுமைத் தோற்றம் ஓங்கி நிற்கின்றது.
ஏழை முதல் பணக்காரர்கள் வரை, கைத்தறியில் தொடங்கி பட்டு வேட்டி வரையென விதவிதமான வேட்டிகள் அவரவர்கள் பொருளாதார வசதிக்கேற்ப உள்ளன. நம் மக்களில் சிலர் வேட்டி கட்டுவதையே இழிவாக நினைக்கின்றனர். நம் நாட்டில் உள்ள கேளிக்கை விடுதிகளில் வேட்டி உடுத்திச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஒரு கேளிக்கை விடுதியில் வேட்டி கட்டி வந்த நீதிபதி ஒருவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைக் கண்டு தமிழகமே வெகுண்டு எழுந்தது. நாடு முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. தமிழக முதல்வர், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் வேட்டி உடுத்தி வருபவர்களை தடுக்கும் கேளிக்கை விடுதிகள், உயர்தர ஓட்டல்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.
குடும்ப விழா, கோவில் விழா, நாம் வழக்கமாக கொண்டாடும் தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களில் வேட்டி உடுத்திக் கொள்வதையே பெருமையாக கருதுகின்றோம். இத்தகைய சிறப்பும், தொன்மையும் மிக்க உடையான வேட்டியை நாம் அன்றாடம் உடுத்த வேண்டும். வேட்டி கட்டுவதில் உள்ள சவுகரியம், பிற உடைகள் அணியும்போது கிடைக்காது. இதுவரை வேட்டி கட்டாதவர்கள் கூட வேட்டி தினமான நாளை முதல் வேட்டியை கட்ட தொடங்குங்கள். வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் கூட நம்முடைய வேட்டியைக் கட்டி மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்த இனிய நாளில் அனைவரும் வேட்டி உடுத்தி, நம் தொன்மையான பாரம் பரியத்தை பாதுகாப்போம் என்று உறுதி மேற்கொள்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.