சமையல் எரிவாயு டேங்கர் லாரி டெண்டரில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் நியாயமே இல்லாதது : ஈஸ்வரன்
சமையல் எரிவாயு டேங்கர் லாரி டெண்டரில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் நியாயம் இல்லாதது என ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரிகள், இன்று வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஆறு மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
மண்டல அளவில் வாடகை ஒப்பந்தம் நடந்த வலியுறுத்தி தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மத்திய, மாநில அரசுகள் டெண்டர் முறையில் ஏற்படுத்தப்பட்டு உள்ள மாற்றத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
செவிசாய்க்காத அரசுகள்
அந்த அறிக்கையில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கொள்கையினால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த தொழிலை நம்பியிருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கடந்த இரண்டு மாதங்களாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பல்வேறுமுறை முறையிட்டும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காததால் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் சூழலே உருவாகி இருக்கிறது.
ஏராளமானோர் பாதிப்பு
மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை புதிதாக கொண்டு வரும் போது அந்த தொழிலில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அப்படி யாரும் செய்வது கிடையாது. இதனால் பாதிக்கப்படுவது தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும், மக்களும் தான். பல விஷயங்களில் ஒரே இந்தியா என்று பேசுகின்ற மத்திய அரசு, டேங்கர் லாரி டெண்டர் முறையில் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று சொல்வது நியாயமா ?.
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும்
இது அடுத்தக்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் கூட அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் தான் வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டருக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்படுவதற்குள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாரி உரிமையாளர்களின் கோரிக்கை
எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அந்தந்த மாநிலங்களின் மூலம் நடத்தப்படும் டெண்டர்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற புதிய கொள்கை முடிவை கைவிட தமிழக அரசும், தமிழக முதல்வர் அவர்களும் உடனடியாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று ஈஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.