பட்டாசு உற்பத்தி தொழிலை மத்திய மாநில அரசுகள் பாதுகாக்க முன்வர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
பட்டாசு உற்பத்தி தொழிலை மத்திய மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.
சென்னை : பட்டாசு விற்பனைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நீக்கி அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.
பட்டாசு வெடிக்க வடமாநிலங்களில் தடைவிதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
மேலும் இதற்கு சிறப்பு சட்டம் இயற்றி இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உடனடி தீர்வு காண வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்து உள்ளார்.
தொழிலாளர்கள் பாதிப்பு
அந்த அறிக்கையில், சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நீக்க வலியுறுத்தியும், தொழில் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரங்களில் ஒன்றாகவும், அந்நிய செலாவணி ஆதாரமாகவும் திகழும் பட்டாசு ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை கவலையளிக்கிறது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
பட்டாசு ஆலைகள் எதிர் கொண்டு வரும் சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும் புரிந்து கொள்வது மிகவும் எளிதானது. தலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. எதிரில் இருக்கும் பொருட்கள் கூட தெரியாத அளவுக்கு மாசு மூட்டம் இருந்ததால், அதற்கு முக்கியக் காரணம் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை தான் என்று பல தரப்பினரும் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தில்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அடுத்தக்கட்டமாக இந்தியா முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதி மன்றத்தில் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் எதிர்மறையான தீர்ப்பு வெளியாகி விடுமோ என்ற அச்சமே பட்டாசு உற்பத்தித் தொழிலை அடியோடு அழித்து விடுமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில் ஒரு வணிகர் கூட முன்பணம் தரவில்லை.
நியாமான கோரிக்கை
இதனால் மூலப்பொருட்களுக்கான முதலீடு இல்லாதது ஒருபுறம், பட்டாசுகளை உற்பத்தி செய்தாலும் அதை விற்க முடியுமா? என்ற கவலை மறுபுறம் வாட்டுவதால் தான் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன. பட்டாசுக்கு தடை விதிக்கக் கூடாது, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் விரைவாக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது தான் இவர்களின் கோரிக்கை ஆகும். எந்த அடிப்படை யில் பார்த்தாலும் இந்த கோரிக்கைகள் நியாயமானதே.
சீனபட்டாசுகளுக்கு வழிவகுக்கும்
பட்டாசுகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. வெடிப் பொருட்கள் சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்டுள்ள மூலப் பொருட்களை மட்டுமே பட்டாசு தயாரிக்க பயன்படுத்த முடியும். சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை பட்டாசு தயாரிப்பில் பயன் படுத்த தடை விதிப்பதன் மூலம் பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கலாம். அதுமட்டுமின்றி பட்டாசு வெடிப்பது இந்திய மக்களின் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். அதை சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது. பட்டாசுக்கு தடை விதிப்பதன் மூலம் சிவகாசி பட்டாசு ஆலைகள் மூடப்பட்டால் சீன பட்டாசுகள் இந்தியாவில் சட்டவிரோதமாக விற்கப்படும் நிலை உருவாகும்.
வேலைவாய்ப்பு பாதிக்கும்
சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மற்றும் அவற்றைச் சார்ந்த தொழில்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டால் இந்த 10 லட்சம் பேரும் வேலை இழப்பார்கள். அதுமட்டுமின்றி பட்டாசு ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியையும் இழக்க நேரிடும். இது இந்திய பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு பட்டாசு தயாரிப்பு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.