சொந்த மாநிலத்தில் தேர்வெழுத கெஞ்சும் நிலை.. மாணவர்களுக்கு அநீதி.. இயக்குநர் பா.ரஞ்சித் விளாசல்
சொந்த மாநிலத்தில் தேர்வெழுதுவதற்கு கெஞ்சும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளது அநீதி என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : நீட் நுழைவுத் தேர்வை சொந்த மாநிலத்திலேயே எழுத அனுமதி கோரி கெஞ்சும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டிருப்பது அநீதியான செயல் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அங்குதான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசின் இந்தப்போக்கை பலரும் வன்மையாக கண்டித்துள்ள நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் இதுதொடர்பான கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிய மாநிலத்தின் மாணவர்களை, சொந்த மாநிலத்திலேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு மத்திய அரசு தள்ளிவிட்டது.
மாணவர்களின் இந்த நிலைக்கு மாநில அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் என்றும், இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் பா.ரஞ்சித் குற்றஞ்சாட்டியுள்ளார்.