மாநில அரசுகளின் குறுக்கு புத்தி.. மதுக் கடைகளை திறக்க நெடுஞ்சாலைகளை மாற்ற அதிரடி முடிவு!
மதுக்கடைகளை மீண்டும் திறக்க நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்ற மாநில அரசுகள் முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மதுக்கடைகளை மீண்டும் திறக்க நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்ற மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிகட்ட இந்த முடிவு எழுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நாடுமுழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை கடந்த 31ஆம் தேதியுடன் மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. சாலையின் இரு புறங்களிலும் 500 மீட்டர் தூத்துக்கு மதுக்கடைகள் அமைக்கவும் தடைவிதித்து உச்சநீதிமன்றம், 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகள் உள்ளன என விளம்பரம் செய்யக்கூடாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வருவாய் இழப்பை சரிக்கட்ட மீண்டும் மதுக்கடைகளை திறக்க மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றுவது குறித்து மத்திய அரசுகள் பரிசீலித்து வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி மீண்டும் மதுக்கடைகளை திறக்கலாம் என மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
அதன்படி மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்ற மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் ஏற்படும் சட்ட சிக்கல்கள் குறித்து வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே உத்தரபிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் பல மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி அறிவித்துள்ளது. இதே வழியில் செயல்பட தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பால் வருவாய் இழப்பை சந்தித்துள்ள மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.