நெல்லை அருகே இரவில் ஓடும் பேருந்தில் திடீரென அணைந்த விளக்குகள்.... பயணிகள் திக் திக் பயணம்
திருநெல்வேலி: திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென விளக்குகள் செயல்படாததால் பயணிகள் திகிலில் உறைந்தனர்.
நெல்லை கட்டபொம்மன் நகர் கிளையை சேர்ந்த அரசு பேருந்து இரவு 8 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 80 பயணிகள் இருந்தனர்.
இந்த பேருந்து ஸ்ரீவைகுண்டம் பாலத்தில் சென்ற போது திடீரென அனைத்து விளக்குகளும் அணைந்து விட்டன. இதனால் பாலத்தை தாண்டியவுடன் புதுக்குடி அருகே பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும் நடத்துநரும் பழுது பார்த்தனர்.
செல்போன் வெளிச்சத்தில்..
ஆனாலும் அவர்களது முயற்சி கைகொடுக்கவில்லை. செல்போன் வெளி்ச்சத்தில் நடத்துநர் டிக்கெட் கிழித்து கொடுக்க பேருந்து கருங்குளத்தை தாண்டியது.
டார்ச் உதவியுடன்...
அப்போது அவரது செல்போனும் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. பின்னர் கையில் இருந்த டார்ச்சை உபயோகித்து நடத்துநர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.
பீதியில் தத்தளிப்பு
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். கடைசிப் பேருந்தை பிடிக்க வேண்டும்...ரயிலைப் பிடிக்க வேண்டும் என்ற தவிப்பில் இருந்த பயணிகள் என்ன ஆகுமோ என பீதியில் தத்தளித்தனர்.
மாற்றுப் பேருந்தில்...
இதனால் வேறுவழியே இல்லாமல் சமாதானபுரம் வந்த போது பயணிகள் பேருந்தை நிறுத்த சொல்லிவிட்டனர். பின்னர் மாற்று பேருந்தை வரவழைத்து அதில் நிம்மதியாக பயணிகள் ஏறிச் சென்றனர்.