தமிழகம்: 39 தொகுதிகள் - 845 வேட்பாளர்கள் - 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகள் 42 மையங்களில் எண்ணும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் கடந்த மாதம் 24 ம் தேதி நடந்த தேர்தலில் 73.67% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
13626 போலீஸ் பாதுகாப்பு
42 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 13,626 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
12000 பணியாளர்கள்
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 12,000 பேர் ஈடுபட்டனர். தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை 62 பார்வையாளர்கள் மேற்பார்வையிட்டனர்.
செல்போனுக்குத் தடை
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கைபேசி, மடிகணினி கொண்டு செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
சென்னையில் பாதுகாப்பு
சென்னையில் ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மத்திய பாராமிலிட்டரி படைகள், தமிழக ஆயுத படை வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
ஒவ்வொரு வாக்கு மையமும் 800 காவல் துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதுடன் வீடியோ மூலமும் கண்காணிக்கப்பட்டது.
ரோந்துப்பணியில் போலீஸ்
நகரில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. காவல் துறை அதிகாரிகளின் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.