மத்திய அரசுடன் இணக்கமாக போனால் தான் நிதி கிடைக்கும்.... சொல்றது செல்லூர் ராஜூ தான் மக்களே!
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் மாநில அரசுக்கு நிதி கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை : மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதில் தவறில்லை, அவ்வாறு இணக்கமாக செயல்படுவதால் தான் நிதி கிடைப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால், அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. கட்சியைச் சேர்ந்த 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். சின்னம் கிடைத்த பின்னர் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்.
நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் மத்திய தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் ஜிஎஸ்டி வசனங்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்.
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழக மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அவர்களுடன் முரண்பட்டால் எந்த திட்டத்திற்கும் நிதி பெற முடியாது. மாநில அரசுக்கு மத்திய அரசு நிறைய நிதி உதவி செய்துள்ளது. எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவில் டிஜிட்டல் உரிமைகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதால் தான் இதெல்லாம் கிடைத்திருக்கிறது. தேவையில்லாமல் அவர்களை பகைத்துக் கொள்வது தமிழக மக்களுக்கு நாமே செய்யும் தீங்காகும். அதிமுக மட்டுமல்ல திமுகவும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்துள்ளது.
திமுக மத்திய அரசுக்கு அடிமையாகவும் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டும் இருந்தது. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரம், ஈழத்தமிழர் பிரச்னை உள்ளிட்ட தமிழகர்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்து தமிழக அரசு மத்திய அரசிடம் இழந்ததை சொல்லிக்கொண்டே போகலாம் என்றும் அவர் கூறினார்.