சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கேலிக்கூத்தாக்கும் மாநில அரசுகள்.. குடிமகன்களுக்காக வளைவதை பாருங்கள்!
சென்னை: மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றும் முயற்சியில் பல மாநிலங்கள் இறங்கியுள்ளன. மதுபான கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக இவ்வாறு குறுக்கு வழியில் சட்டத்தின் சந்து, பொந்துகளில் தப்பிக்க ஆரம்பித்துள்ளன அந்த மாநிலங்கள்.
நெடுஞ்சாலைகளிலும் மற்றும் அவற்றையொட்டி 500 மீட்டர் வரை உள்ள பகுதிகளிலும் இருக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசே டாஸ்மாக் கடைகளை நடத்துவதால் உடனடியாக மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு பெரும்பாலும் மதுபான கடைகளே காரணமாக இருப்பதால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடைகள் மூடல்
இதையடுத்து, தமிழகம் முழுவதும் 3,321 மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 604 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆக மொத்தம், தமிழ்நாட்டில் மட்டும் 3,925 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.
டாஸ்மாக் பிரச்சினை
இவற்றில் பெரும்பாலான கடைகளை வேறு இடங்களில் திறந்துவிடலாம் என இடம் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்தந்த பகுதிகளில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
வாசலை மாற்றுகிறார்கள்
எனவே, சில இடங்களில், கடையின் வாசலை அடைத்துவிட்டு, வேறு சாலை பக்கம் வாசல் வைத்துவிட்டு கணக்குக் காட்டும் முயற்சியும் நடைபெறுகிறதாம். ஆனால் தமிழகத்தை விட வேறு சில மாநிலங்கள் படு மோசம். தனியார் மது விற்பனை கூடங்களுக்கு ஜிங்சாங் அடிக்கின்றன அவை.
மாநிலங்கள் கோல்மால்
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, கோவா போன்ற மாநிலங்கள் மாநில நெடுஞ்சாலைகளை திடீரென மாவட்ட சாலைகளாக மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால், அந்தச் சாலைகளின் ஓரமுள்ள கடைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை. இதைத்தான் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்புவது என்பார்களோ!