விழுப்புரம் கோயிலில் 5 ஆண்டுகளாக 'பிரபாகரன், வீரப்பன் சாமி' சிலைகள்- அகற்ற போலீஸ் நடவடிக்கை!!
சென்னை: விழுப்புரம் அருகே கோயில் ஒன்றில் 5 ஆண்டுகளாக பொதுமக்களால் வழிபாடு நடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோரது சிலைகளால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சிலைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ளது சடையாண்டிகுப்பம் கிராமம். இக் கிராமத்தில் உள்ள ஐயனாரப்பன் கோயில் கடந்த 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கோயிலில் 25 அடி உயர ஐயனாரப்பன் சிலைக்கு வலது புறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலையும், இடது புறத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் சிலையும் நிறுவி அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மதியழகன் என்பவரது முயற்சியால் இந்த சிலைகள் நிறுவப்பட்டன.
இந்நிலையில் இந்த சிலைகள் குறித்து போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்துக்கு சனிக்கிழமை இரவு சென்ற போலீசார் சிலைகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர்கள் சிலையை வைத்து வழிபாடு நடத்தக் கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து பிரபாகரனின் சிலையின் தொப்பியில் பொறிக்கப்பட்டிருந்த புலிச் சின்னம் அகற்றப்பட்டது. பிரபாகரன் சிலையின் மீசையின் வடிவமும் லேசாக மாற்றிய அமைக்கப்பட்டது. இதேபோல் வீரப்பன் சிலையிலும் லேசான மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் சிலையை அகற்றுமாறு போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மையில் நாகப்பட்டினத்திலும் இதேபோல் கோயிலில் பிரபாகரன் சிலை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் போலீசார் இரவோடு இரவாக அதை அகற்றியது குறிப்பிடத்தக்கது.